Thursday, December 29, 2011

எஸ் பாலசந்தர்




 இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் வி.சாந்தாராம், 1936-ல்சீதா கல்யாணம்” என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். இதில் எஸ்.பாலசந்தரின் குடும்பமே நடித்திருக்கிறார்கள். தசரதராக நடித்தவர் பாலசந்தரின் அப்பா சுந்தரம் அய்யர் அவரது அண்ணன் எஸ்.ராஜம் ராமர் வேஷம். அக்கா ஜெயலட்சுமி சீதையாக நடித்திருக்கிறார், அப்படத்தின் ஒரு காட்சியில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக பாலசந்தர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகத் துவங்கிய அவரது திரைப்பிரவேசம் தமிழ்சினிமாவில் பல்வேறு மாற்றங்களை. சாதனைகளை உருவாக்கியது, பின்னாட்களில் சினிமா உலகை உதறிவிட்டு வீணை வாசிப்பில் உலகப்புகழ் பெற்று வீணை எஸ் பாலசந்தர் என்று அறியப்பட்டார்.

1948 மார்ச் மாதத்தில் வெளிவந்த “இது நிஜமா”  என்ற  திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார் எஸ்.பாலசந்தர் . இதுவே தமிழில் இரட்டை வேடம் இடம் பெற்ற முதல் சமூகப்படம். (கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்)

1950 -60 களில் வெளியான படங்கள் பெரும்பாலும், குடும்பக் கதைகளாகவும், புராணக் கதைகளையும் ஒட்டித்தான் இருந்தன. அதிலும் குறிப்பாக, சிவாஜிகணேசனின் உணர்ச்சிக் காவியங்களும், ஜெமினிகணேசனின் காதல் கதைகளும்,எம்.ஜி.ராமச்சந்திரனின் வரலாற்றுக் கதைகளும், வந்து கொண்டிருந்தன.

ஸ்ரீதர், பீம்சிங், பி,.ஆர்.பந்துலு போன்ற இயக்குனர்கள், குடும்பங்களில் நடக்கும் உறவுச் சிக்கல்களையும், மெலோடிராமா பாணியில், திரைக்கதை அமைத்து படங்களை உருவாக்கினார்கள்.

அந்தச் சமயத்தில், எஸ்.பாலசந்தரின் திரைப்படங்கள், ஒரு புதுவிதமான அலையைத் தோற்றுவித்தன . திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது திரைப்படங்கள், ஆங்கில படங்களில்ன் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தன. அவற்றை, நம்முடைய சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஏற்ப  மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். எஸ்.பாலசந்தரின் படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், மலிவான பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல production value கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.இன்றும் அவரது திரைப்படங்களைப் பார்க்கும் போது அவரது கேமிரா கோணங்களும். கதை சொல்லும் முறையும், பாடல்களும், பின்னணி இசையை கையாளும் விதமும், அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி தமிழ் இயக்குனர்.

அழகான ஆங்கில பேச்சும்  அவரது ஸ்டைலான நடிப்பும் நமக்கு மேலும் வியப்பளிக்கின்றன . இப்படி  சினிமாவில் நடிப்பு, இசை, இயக்கம் என்று பன்முகத்தன்மையில்   சிறப்பித்த காரணத்தால் அவருக்கான தனியிடம் கிடைத்தது,

எஸ்.பாலசந்தர்  சொந்தப்பட நிறுவனமான எஸ்.பி.கிரியேஷன்ஸ்சைத் தொடங்கி, “அவனா இவன்”, “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய திகில் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

அந்த நாள், பொம்மை, நடு இரவில் ஆகிய மூன்று படங்களையும் தமிழ் சினிமாவின்  முன்னோடி முயற்சிகள் என்றே சொல்லாம்.


இதில் அந்த நாள் அகிரா குரசோவாவின் ரோஷமான் படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டிருக்கிறது.ரோஷமோன் போல ஒரு நிகழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைச் சொல்ல முயன்ற இயக்குனர் அதற்குப் பின்புலமாக யுத்த காலத்தை எடுத்துக் கொண்டது திரைக்கதை யுக்தி பிரமிக்கவைகிறது.


இந்தியாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் (சிவாஜி) ஆத்திரத்தில், அந்நிய நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள் என்ற கதையை ரோஷமானின் கதைக்கு இணையாகத் தேர்வு செய்து படமாக்கியிருந்தார் , குறிப்பாக இந்த படத்தில் வரும் சிவாஜியின் எதிர்மறை கதாபாத்திரமான ரேடியோ என்ஜினியர் யாரும் நடிக்காத கதாபாத்திரம், அதன் இருண்ட மனநிலையும் கோபமும் மனக்கொதிப்பும் நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கும் ,படத்தில் பாடல்களே இல்லை.


அது போன்ற கதாபாத்திரம் எதையும் பின்னாளில் சிவாஜி நடிக்கவேயில்லை , ரோஷமானின் படத்தொகுப்பை போலவே இதிலும் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இப்படத்தை இயக்கும் போது எஸ். பாலசந்தருக்கு வயது 27, சம்பிரதாயமாக நம்பிக் கொண்டிருந்த திரைப்படத்தின் விதிகளை தூர எறிந்துவிட்டு மாறுபட்ட அழகியலோடு கதை முன்பின்னாக சென்று அவிழும் முறையில் திரைக்கதை  உருவாக்கியிருந்தார்.

பொம்மை மற்றும் நடுஇரவில் படத்தில் அவரது இயக்கமும் பரிசோதனை முயற்சிகளும் கூடுதல் வியப்பளிக்கின்றன,


ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் பொம்மை படம், 1964-ல் வெளி வந்த இப்படத்தில் ஒரு பொம்மைக்குள் வெடிகுண்டை வைத்து ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள், அந்த பொம்மை கைமாறிப்போய்விடுகிறது, அதைத் தேடியலைகிறார்கள் என்ற எளிய கதையை தனது திரைக்கதையின் வழியே மிக சுவாரஸ்யமாக்கியிருப்பார் பாலசந்தர்.


படத்தின் துவக்கத்தில் ஒரு மவுத் ஆர்கன் வாசிக்கும் காட்சி அறிமுகமாகிறது, அந்த இசை சிலிர்ப்பூட்டக்கூடியது,  படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக பாலசந்தரே நடித்திருக்கிறார், அவரது நடிப்பு அலாதியான ஒன்று, முகபாவங்களை வெளிப்படுத்தும் முறையும். நடையில் அவர் காட்டும் நளினமும். பேசும் போது ஸ்டைலான ஆங்கிலம் கலந்து பேசும் முறையும், உடையமைப்பும் யார் சாயலும் அற்ற தனிவகை நடிப்பாகவே இருக்கிறது, பொம்மை படத்தின் ஆரம்பக் காட்சியில் அவர் நடந்து வந்து  தனது சிங்கப்பூர் பயணத்தை பற்றி பேசும்போதே படம் வித்யாசமான ஒன்று என்று  நமக்கு    புரிந்துவிடுகிறது.

பொம்மை படத்தில் ஐம்பது வருஷத்தின் முந்தைய சென்னை நகரின் காட்சிகளை காண்பது வேடிக்கையாக இருக்கிறது, கூட்டமேயில்லாத விமானநிலையத்தில் பயணிகளை மலர்கொத்து தந்து வழியனுப்ப வந்தவர்கள், அன்றைய டாக்சிகள். பரபரப்பில்லாத சாலைகள்,  அக்கால பேஷன் உடைகள், உணவகங்கள். சாலையோர மனிதர்கள், சென்னையின் கடந்தகாலத்தை காண்பது பிரமிப்பாக  இருக்கிறது.

படத்தின் பின்ணணி இசை சிறப்பானது, எந்த இடத்தில் இசையே இல்லாமல் நிசப்தமாக விட வேண்டும் என்பதை அவர் சரியாக உணர்ந்திருக்கிறார், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் காணப்படுவது போல  செயற்கையான பின்னணி இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசைக்கோர்ப்பு அவருடையது.

ஒருபோதும் பாலசந்தர் டூயட் பாடல் காட்சிகளை  பயன்படுத்தவேயில்லை, பி.சுசீலா பாடி விஜயலட்சுமி நடனமாடியுள்ள எங்கோ பிறந்தவராம் பாடலையும், தத்தி தத்தி நடந்து செல்லும் தங்கபாப்பா பாடலையும் எஸ்.பாலசந்தர்  படமாக்கிய விதம் மாறுபட்டதாகவே இருக்கிறது.

பொம்மை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த  நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஜேசுதாசின் பாடல் உள்ளது,  இதுத்தான் அவருக்கு முதல் தமிழ்  பாடல். சாலையோரப் பிச்சைக்காரன் பாடும் பாடலது. பாடலின் வரிகள் கதையோடு இணைந்து செல்லும் அதே வேளையில் ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும், அப்பாடலை ஜேசுதாஸ் பாடும் முறை கேட்பவரை மெய்மறக்க செய்துவிடும்.




இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஓபன்  சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது, பார்வையாளர்களுக்கு பொம்மையில் வெடிகுண்டு இருப்பது தெரிந்துவிட்டது, ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது, எந்த நிமிஷம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற மர்மத்தை விறுவிறுப்பாக கையாளும் விதத்தில் திரைக்கதையமைப்பின் உச்சநிலையை உருவாக்கிக் காட்டுகிறார் பொம்மை படத்தின் இறுதி காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பாலசந்தர் தனது படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறார், இன்று வரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சியது.




தமிழ் ஊடகக்கலை பயிற்சியில் மௌனப்படங்களை பற்றி தனிப்பாடம்  இருக்கிறது. சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், கிரிபித், என்று நூறு ஆண்டுகளுக்கு முந்திய அமெரிக்க சினிமாவின் சலனப்படங்களை மட்டுமே  நம் தமிழ் ஊடகக்கலை மாணவர்களுக்கு சொல்லிதறபடுகிறது.

ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்திய தமிழ்சினிமாவை பற்றி அதிகம் சொல்லித்தருவதில்லை .நமது முன்னோடிகளை நாம் புறக்கணிக்கிறோம், அவர்களை உதறித் தள்ளிவிட்டு எங்கிருந்தோ நமது அடையாளங்களை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம் என்பது தான் இன்றுள்ள நமது பிரச்சனை என்பது வருத்ததிற்குரியது.

தமிழ்சினிமாவின் தனித்துவமான இயக்குனர்கள் குறித்து இன்றுவரை விரிவான ஆய்வுகளோ. முறையான கட்டுரைகளோ வெளியாகவேயில்லை, அப்படி வந்தால்  அந்தப் பட்டியலில் தனித்து ஒரு நூல் எழுதுமளவு முக்கியமானவர், தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளில் ஒருவர் என்றும் இயக்குனர் எஸ் பாலசந்தர் அவர்களை சொல்லலாம் .

                                                என்றும் அன்புடன் ,
                           ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV
 

Wednesday, December 21, 2011

ஸ்ரீ ஸ்ரீநிவாச ராமனுஜன்




                    (December 22, 1887 – April 26, 1920)

 

ஈரோட்டில் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி 1887 வியாழக் கிழமை, மார்கழி 9ஆம் நாள்,  சீனிவாசன், கோமளத்தம்மாள் தம்பதியருக்கு ராமானுஜன் மகனாக பிறந்தார் .கோமளத்தம்மாள் ராமனுஜத்தை "சின்னச்சாமி" என்றுதான் அழைப்பார்.

 

கோமளத்தம்மாள் கோவிலில் பஜனை செய்வது வழக்கம். டிசம்பர் 1889ஆம் வருடம் அவர் பஜனைக்கு வராதது கண்டு பஜனைக் குழுவில் ஒருவர் வந்து பார்க்க, குழந்தை ராமனுஜனுக்கு அம்மை நோய் கண்டிருப்பதை அறிந்தார். தன் வாழ்நாள் முடிய அம்மை வடுவை ராமனுஜன் தாங்க வேண்டியதாயிற்று. 


ராமானுஜத்திற்குப் பிறகு நவம்பர் 1891ல் பிறந்த தங்கை இரண்டு மாதத்திற்குள்ளும், ஜுன் 1894ல் பிறந்த தம்பி ஒரு வருடத்திற்குள்ளும் காலமனார்கள். அதன் பிறகு, தம்பிகள் இருவர், 1898ல் லக்ஷ்மிநரசிம்மனும்,1905ல் திரு நாரயனனும் பிறந்தனர். 

ராமானுஜன் மூன்று வயது ஆகியும் பேசாததால், கோமளத்தம்மாள், குழந்தையுடன், காஞ்சீபுரத்திலிருந்த தன் தகப்பனார் வீட்டிற்கு வந்தார்.அங்கு, ராமானுஜத்திற்கு அக்ஷராப்பியாசம் செய்து வைத்தனர். ராமானுஜன் விரைவில் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டார். 


சம்பிரதாயப்படி அக்டோபர் 1ஆம் தேதி 1892ல் விஜயதசமி அன்று ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். 1894ஆம் வருடத்திலிருந்து 1895ற்குள் இரண்டு மூன்று பள்ளிக்கூடம் மாறினார், காஞ்சீபுரம்,  சென்னை, கடைசியாகக் கும்பகோணம் என்று கும்பகோணம் காங்கயன் பிரைமரி பள்ளியில் படிக்கும் பொழுது, நவம்பர் 1897, 10வயதான ராமானுஜன் ஆங்கிலம், தமிழ், கணக்கு, பூகோளம், இவற்றில் ஜில்லாவில் முதன்மையாகத் தேறினார்.

மூன்றாம் ஃபார்ம் ( எட்டாம் வகுப்பு) படிக்கும்பொழுது, ஒரு நாள் உபாத்தியாயர், ஒரு எண்ணை அதனாலேயே வகுத்தால் ஒன்று விடையாக வரும் என்று சொல்லி உதாரணமாக மூன்று மாம்பழத்தை மூன்று பேருக்குப் பங்கிட்டு கொடுத்தால் தலைக்கு ஒன்று கிடைக்கும். 1000 பழத்தை 1000 பேருக்குக் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் ஒன்று கிடைக்கும் என்றார். அதைக்கேட்ட ராமானுஜன் பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் ஒன்று வருமா? இல்லாத பழத்தை, இல்லாத ஆட்களுக்குப் பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் பழம் ஒன்று கிடைக்குமா? என்று கேட்டாராம். 

கும்பகோணம் சாரங்கபாணி சன்னதித் தெருவில் ராமானுஜத்தின் வீடு இருந்தது. ராமானுஜத்திற்கு 11 வயது இருக்கும் பொழுது திருச்சிக்காரர் ஒருவரும், திருநெல்வேலிக்காரர் ஒருவரும், இவர்கள் வீட்டில் தங்கி காலேஜில் படித்தார்கள். அவர்கள் ராமனுஜத்திற்குக் கணக்கு சொல்லிக்கொடுத்தனர். சிறிது காலத்திலேயே அவர்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ராமானுஜன் கற்றுக்கொண்டார். மேற்கொண்டு சொல்லித்தர இயலாததால் காலேஜ் புத்தக சாலையிலிருந்து எஸ்.எல். லோனியின் திரிகோணமிதி புத்தகம் கொண்டு வந்து தந்தனர். இது பெரிய படிப்பிற்கு உடையது. (With problem in advanced realm). ராமனுஜன் 13 வயதிற்குள் அதில் தேற்ச்சி பெற்றுவிட்டார். 

1900ஆம் ஆண்டு வடிவியல் சார்ந்த மேலும் எண் கணக்கியலிலும் தானே கணக்குப் போட ஆரம்பித்தார் (In 1900 he began to work on his own on mathematics summing geometric and arithmetic series.) 1902ல் அவருக்கு, க்யூபிக் சமன்பாடு கணக்குகள் போடுவது கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பிறகு quartic சமன்பாடு கணக்குகளைப் போட சொந்தமாக ஒரு முறை கண்டுபிடித்தார். quintic சமன்படு கணக்குக்கு முறை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் தோல்வியுற்றார். 

1904ல் ராமானுஜர் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார், series (1/n) பற்றி ஆரய்ந்தார், மேலும் Euler's constantஐ 15 தசம ஸ்தானத்திற்கு கணக்கிட்டார். Bernoulli numbers பற்றிப் படித்தார். இது அவரே கண்டுபிடித்ததாகும்.
1904ல் ராமனுஜந்த்திற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. கணக்கைத்தவிர மற்ற பாடங்களில் அவர் அக்கரை காட்டாததால் அந்த உதவி அடுத்த வருடம் புதுப்பிக்கப்படவில்லை. மறுபடியும் பணக்கஷ்டம். இதனால் யாரிடமும் சொல்லாமல் விசாகப்பட்டணத்திற்கு ஓடிவிட்டார். அங்கும் கணக்கைத் தொடர்ந்து படித்தார்.  Hyper Geometric Series - ''உயர் ஜியாமெட்ரிச் சீரினம்'' பற்றிய Integrals - “முழுமைப்பாடுகள்” Infinite Series -'' முடிவில்லாச் சீரினங்கள்'', Continued Fractions - ''தொடர்ப் பின்னங்கள்'' போன்றவை பற்றி அவர் ஆய்வுகள் செய்தார்.

கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை, அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் University of Illinois கணித வல்லுநர், Bruce C. Berndt ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார்.


1906ல் சென்னை வந்து பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். அவருடைய குறிக்கோள் ஆர்ட்ஸ் பரிட்சை பாஸ் செய்து மதராஸ் சர்வகலாசாலையில் சேரவேண்டும் என்பது. தேர்வில் கணிதம் தவிர மற்ற பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் அவர் சர்வகலாசலையில் சேர முடியவில்லை. 

ஆனால் கணித ஆராய்ச்சியை மட்டும் விடவில்லை. 1908ல் continued fractions and divergent series என்பதைப் படித்தார்.14ம் தேதி ஏப்ரல் 1909ல் அவருக்கு ரணசிகிச்சை நடந்தது. அவர் உடல் நலம் தேற சிறிது காலம் ஆகியது.ராமானுஜனுடைய வாழ்வையே புரட்டி போட்ட புத்தகம் ஜி.எஸ்.கார் எழுதிய  A Synopsis Of Results in Pure and Applied Mathematics ஆகும் இப்புத்தகத்தில் ஆய்லர், காஷி, பெர்னோலி, டயபான்டே,டெஸ்கார்ட்ஸ்.பூயூரியர், லெக்ராஞ்சி போன்ற கணிதமேதைகளின் சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. 14ஆம் தேதி ஜூலை 1909 எஸ். ஜானகி அம்மாள் என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். Journal of the Indian Mathematical Societyக்குக் கணக்குகள் அனுப்புவதும், விடைகள் தருவதும் வழக்கமாகக் கொண்டார். 1911ல் Bernoulli numbers பற்றிய அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை Journal of the Indian Mathematical Societyயில் வெளிவந்ததும் அவருடைய திறமை எல்லோருக்கும் தெரியவந்தது. 

1912ஆம் வருடம் மார்ச் 1ஆம் தேதி, E W Middlemast the Professor of Mathematics at The Presidency College in Madras, அவர்களின் சிபாரிசினால் மதராஸ் துறைமுக அலுவலத்தில் (Madras Port Trust) வேலையில் சேர்ந்தார். மதராஸ் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த CLT Griffith, ராமானுஜத்தின் திறமையை அறிந்தவர். லண்டன் சர்வகலாசையில் கணிதப் பேராசிரியராக இருந்த MJM Hill என்பவருக்கு 12-11-1912 ல் ராமானுஜத்தைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்துடன், ரமனுஜத்தின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 1911ல் Bernoulli numbers. பற்றி ராமானுஜன் எழுதிய கட்டுரையையும் இனைத்தார். MJM Hill ஊக்கமளிக்கும் வகையில் பதில் போட்டபோதிலும், மேற்கொண்டு அவர் ஒன்றும் செய்யவில்லை. ராமானுஜன் EW Hobson and HF Baker என்பவர்களுக்கும் கடிதம் எழுதினார். அவர்கள் இருவரும் பதில் அளிக்கவே இல்லை. GH Hardy என்பவருடைய Orders of infinity என்ற புத்தகத்தை ( 1910ம் வருடம் வெளியானது) பார்த்ததும் ஜனவரி 1913ல், GH Hardyக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தன்னைப் பற்றி முழு விவரமும் கொடுத்திருந்தார். Hardy, மற்றும் ஒரு கணித பேராசிரியர் Littlewood என்பவருடன் சேர்ந்து, ராமனுஜன் எழுதிய தேற்றங்கள் [சான்றுகள் (proof) இல்லாதவை] யாவற்றையும் படித்தார். 

பிப்ரவரி 8ஆம் தேதி 1913, ஹார்டி, ராமனுஜத்திற்கு பதில் போட்ட்டார். உங்கள் முடிவுகள் தோராயமாக மூன்று பிரிவிகளுக்குள் அடங்குகின்றன. 

1. ஏற்கனவே தெரிந்தவை அல்லது தெரிந்த தேற்றங்கள் மூலம் சுலபமாக நிரூபிக்ககூடியவை.

2. எனக்கு தெரிந்த வரை சில புதியதும், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை, அதன் முக்கியத்தை விட, அதில் உள்ள ஆர்வமும், கடினமும்தான்.


3.சில முடிவுகள் புதியதாகவும், முக்கியத்வம் வாய்ந்ததாகவும் உள்ளன.



இந்தக் கடிதத்தினால் உற்சாகமடைந்த ராமானுஜன் ஹார்டிக்குத் தன்னுடைய் பொருளாதார நிலையை பற்றி எழுதி, உங்களிடமிருந்து ஆதரவாகக் கடிதம் வந்தால் எனகு ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவும் என்று தெரிவித்தார். 

1913ல் மதராஸ் சர்வகலாசலை ராமனுஜத்திற்கு இரண்டு வருடம் ஸ்காலர்ஷிப் கொடுத்தது, ஹார்டி (கம்பருக்கு சடையப்ப வள்ளல் போல் ராமனுஜத்திற்கு இவர்) ராமானுஜத்தை Trinity college cambridhgeக்கு அழைத்துக்கொண்டார். 

17ஆம் தேதி மார்ச் மாதம் 1914 இங்கிலாந்துக்குக் கப்பலில் புறப்பட்டார். ஏப்ரல் 14ஆம் தேதி 1914 லண்டன் போய் சேர்ந்தார். E H Neville என்பவர் ராமனுஜத்தைச் சந்தித்து, நான்கு நாட்கள் லண்டனில் தங்க வைத்து, பிறகு கேம்ப்ரிட்ஜுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வாரங்கள் Neville வீட்டில் தங்கிவிட்டு பிறகு ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து Trinity College ரூமில் தங்கலானார். அவர் வெஜிடேரியன் ஆனதால் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு சாப்பாட்டு விஷயத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. இந்த சமயம் முதல் மஹா யுத்தம் ஆரம்பமானதால் விஷேஷமான ஆகாரங்கள் கிடைப்பது சிரமமாகிவிட்டது. அதனால் அவர் உடல் நலம் கெட்டது. 

ஹார்டிக்கு ஒர் விஷயம் சங்கடமாக இருந்தது. அதாவது, ராமானுஜம் கணக்குப் போடுவதிலும் தேற்றங்கள் நிரூபிப்பதிலும் வல்லவராக இருந்தாலும், அதற்கான அடிப்படைப் படிப்பு இல்லையே என்று. ஆகையால் Littlewood என்பவரை, ராமானுஜத்திற்குக் கஷ்டமான கணக்கு முறைகளைக் கற்றுக்கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் Littlewoodக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. பாடத்தை ஆரம்பித்தால் போதும், ராமானுஜன் தன் வழியில் வாதாட ஆரம்பித்து விடுவார். முதல் உலக யுத்ததில் சேவை செய்ய,Littlewood அழைக்கப்பட்டதால் கணக்கு கற்பிப்பது நின்று விட்டது. தகுந்த படிப்பு (proper qualification), இல்லாத போதிலும் ராமானுஜம் கேம்ப்ரிட்ஜ்ஜில் 1914ஆம் வருடம் அனுமதிக்கப்பட்டார். 16-3-1916ல் ராமனுஜன் கேம்ப்ரிட்ஜ் சர்வகலாசாலையிலிருந்து Bachelor of Science by Research (the degree was called a Ph.D. from 1920) பட்டம் பெற்றார். ஏழு ஆராய்ச்சிக் கட்டுரைகள் Highly composite numbers என்பது பற்றி இங்கிலாந்தில் பிரசுரமாயின. 

1917ல் ராமானுஜன் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார்.
 நோயுற்று சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரை பார்க்க, ஹார்டி வருகிறார். ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பார்க்க போனால் நாம் என்ன செய்வோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி என்ன செய்த்தார் தெரியுமா ?  ராமானுஜத்தை பார்த்த உடனேயே, “ நான் ஒரு டாக்சியில் வந்தேன் அந்த டாக்சியின் நம்பர் 1729 , எனக்கு ஏனோ அந்த நம்பர் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார்! 

என்ன ஒரு அற்புதமான நலம் விசாரிப்பு! 

அத்ற்கு நாமாக இருந்தால் கோபமாக  ஏதாவது சொல்ல்லியிருப்போம்
ஆனால் ராமானுஜம் உடனே , உடனே என்றால் உடனே- “ ஏன் ஹார்டி அப்படி சொல்கிறீர்கள்? அது ஒரு அற்புதமான எண். It is that smallest number which can be presented in two different ways as addition of two cubes : ( 10 to-the-power 3 + 9 to-the-power 3 ) and ( 12 to-the-power 3 + 1 to-the-power 3 ).” என்று கூறினாராம்
இது அவரது மேதாவிலாஸத்திற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி  .செப்டம்பர் மாதம் சிறிது முன்னேற்றம் தெறிந்தது. பல நர்ஸிங் இல்லங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். 


பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி,1918 fellow of the Cambridge Philosophical Society ஆக தேர்ந்தெடுக்கப்ப்ட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவருடைய பெயர் fellow of the Royal Society of London பட்டியலில் , பரிந்துரைக்கப்பட்டது அவர் பெயரைப் பரிந்துரைத்தவர்கள் Hardy, MacMahon, Grace, Larmor, Bromwich, Hobson, Baker, Littlewood, Nicholson, Young, Whittaker, Forsyth and Whitehead. ஆவர். 2-5-1918 அவருடைய தேர்வு உறுதி செய்யப்பட்டு 10-10-1918ல் Fellow of Trinity College Cambridge, ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

27-2-1919 ராமானுஜன் தாயகத்திற்குப் புறப்பட்டார். மார்ச் 13ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்தார். மீண்டும் நோயின் தாக்குதல் தீவிரமாயிற்று படுத்த படுக்கையானார் ராமானுஜன் மரணபடுக்கையில் இருந்த போதும் மாக்-தீட்டா மற்றும் மாடுலர் ஃபங்ஷன் பற்றியா ஆராய்ச்சி குறிப்புகளை தன் நண்பர் ஹார்டிக்கு அனுப்பினார்.

1920 ஏப்ரல் 26 ஏழ்மையோடும் , கடுமையான நோயோடும் இறுதிவரை போராடிய ராமானுஜன் 33 வயது முடிவதற்குள்ளே மரணத்தை தழுவினார் ஆம் இராமானுஜன் இறந்துவிட்டாலும் அவரது  கணித சமன்பாடுகளை நிரூபணம் செய்ய இன்றைய சூப்பர் கம்பியூட்டர்கள் கூட தடுமாறுகின்றன . இராமானுஜத்தின் கணித சமன்பாடுள் தலைமுறைகள்தோறும் தமிழனின் திறனை உலகிற்கு கூறிக்கொண்டே போகும்.



               "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Friday, December 9, 2011

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி


                        சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
                           (10 டிசம்பர் 1878 - 25 டிசம்பர் 1972),

தமிழகத்தில் அப்போதைய சேலம் மாவட்டத்தில்  இருந்த தொரப்பள்ளி கிராமத்தில் சக்கரவர்த்தி வேங்கடார்யா, சிங்காரம்மா தம்பதியருக்கு 10 டிசம்பர் -1878ல் 3-வது மகனாக பிறந்தார். வாழ்க்கைத்துணைவர் அலர்மேலு மங்கம்மா.

ராஜாஜி என்றும் சுருக்கமாக சி.ஆர் என்றும் சேலத்து மாம்பழம் என்ற செல்லப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.

இராஜாஜி ஓசூரில் அரசுப் பள்ளியிலும் பின்னர் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் படிப்பை முடித்தார். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நடத்தி வந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரராக :-


சுதந்திர வேட்க்கை கொண்டு ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார்.

1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.

பிரிட்டன்  ஜெர்மனிடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.போர்க்காலத்தில் பிரிட்டனுக்கு  ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

இந்திய சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்த்தான் என்ற தனி நாடு வேண்டும் என போர்க்கொடி தூக்கிய முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முசுலிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி  முடிவு காண முக்கிய பங்காற்றினார் இவரது திட்டம் ராஜதந்திரி  சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது.

அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.

அரசியல்வாதியாக :-

இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து கட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

காங்கிரசின் சோசலிச நோக்கிற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜவகர்லால் நேருவுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் காங்கிரசிலிருந்து விலகினார்.

1962ல் ஸ்வதந்த்ராக் கட்சியினைத் துவங்கினார். காங்கிரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயம் கொள்கையாகக் கொண்டதாக ஸ்வதந்த்ராக் கட்சி விளங்கியது.

1962, 1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார்.

1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.
அவருடன் கூட்டணி கண்ட திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்த  சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

நாடாளுமன்றபொதுதேர்தலிலும் ஸ்வதந்த்ராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.

இராஜாஜி வகித்த பதவிகள் :-

சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937ஆம் ஆண்டு மதராச மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.

1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக பணியாற்றினார்.

1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராக பணியாற்றினார்.

1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும்பணியாற்றினார்.

1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மகாணத்தின்  முதலமைச்சராகப் பணியாற்றினார்.

1952 முதல் 1953 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக  பதவி வகித்தார். அப்போது அவர் இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதிக்க 1939 ல் இராஜாஜி "Temple Entry Authorization and Indemnity Act" என்னும் சட்டத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானார்.

இராஜாஜி மதராஸ் மாநிலத்தின் முதல்வராக ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினார். அந்த மதுவிலக்குக் கொள்கை 30 ஆண்டுகளுக்குப் பின்னர்  முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ராஜாஜி அவர்கள் எழுத்தாளரா :-


தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார்.

கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார்.

புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே.

ராஜாஜி அவர்கள் பெற்ற விருதுகள் :-


1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார். நம் நாட்டின் மிக உயரிய தேசிய விருதான பாரதரத்னா முதன்முதலில் இவருக்குத்தான் அளிக்கப்பட்டது.

1958ம் ஆண்டு இவரது "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக  "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது.

ராஜாஜி அவர்களின்  இறுதி காலம்  :-


ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் "யூரிமியா" என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17_12_1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது.

மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார்.   டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25_ந்தேதி மாலை 5_44 மணிக்கு தனது 95ம் வயதில் ராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது மகன் சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், குடும்ப நண்பர் "கல்கி" சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர்.

அப்போதைய  தமிழக முதல்_அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், ஸ்வதந்த்ராக் கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி அருகில் இருந்தனர்.


பெரியாருடன்  கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் ராஜாஜி தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். ராஜாஜியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியார், மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இராஜாஜியின் உடலிற்கு தீ வைக்கும் போது பெரியார் தேம்பித் தேம்பி அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொள்கை ரீதியான தனது எதிரியாக திகழ்ந்த ராஜாஜி, பெரியாரின் மனதில் நாணயமான எதிரியாகவும் (அப்படித்தான் பெரியார் கூறியுள்ளார்), அதே நேரத்தில் அன்பு குன்றா நண்பராகவும் இருந்துள்ளார்.


நிகழ்வுகள் :-

 மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தொரப்பள்ளியில் அவரது இல்லத்தை நினைவு இல்லமாகவும், உடல் அடக்கம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும்  தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழக அரசின் மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.
                                              
                                                     என்றும் அன்புடன்,
                   "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV