Monday, October 10, 2011

பாபநாசம் சிவன்


பாபநாசம் சிவன்
(செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973)

 தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போளகம் என்னும் ஊரில் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பாபநாசம் சிவன் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமைய்யா என அழைத்தனர். பாபநாசம் சிவன் என்னும் பெயரானது இவருக்கு தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் இட்ட பெயர்.

1912 இல் பாபநாசம் சிவன் அதிகாலையில் (வைகறையில்) சிவன் கோயிலின் முன் நின்று அரும் பொன்னே மணியே என்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இரங்கிவந்ததாகப் போற்றி புகழ்ந்ததின் காரணமாக இப்பெயர் பெற்றார்.

கர்நாடக சங்கீத மும்மூர்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் பாபநாசம் சிவன் முக்கியமானவர் அவர் கர்நாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றி  உள்ளார்
 
பாபநாசம் சிவன் பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான கர்நாடக சங்கீத மெட்டுக்களை அமைத்துவிடும் திறனையும்  இவருக்கு கலைமகள் தந்திருந்ததாள் .

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் முதலான புகழ்பெற்ற அந்தகால கர்நாடக சங்கீத வித்வான்கள் முதல் இன்றைய ஸுதா ரகுநாதன் ,உன்னி கிருஷ்ணன் , மஹதி  வரை அனைவரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் (கச்சேரிகளில்) பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாபநாசம் சிவன் அவர்கள் 10 ஆண்டுகள் உழைத்து 1952ல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை இயற்றினார்.

இவருடைய கடைசி ஆக்கங்களாக இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலையும்,. அதே போல காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் நூலையும் இயற்றினார் .

பாபநாசம் சிவன் அவர்கள் கிருதி, வர்ணம், பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களிலும் இயற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் முனைவர் ருக்மணி ரமணி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

 பாபநாசம் சிவன் அவர்கள் பெற்ற  
விருதுகளும்,பட்டங்களும்:

இந்திய அரசு பத்ம பூஷன் பட்டம் அளித்துப் பெருமை செய்தது.

தமிழ் இசைச் சங்கம் இசைப் பேரறிஞர் பட்டம் அளித்தது.

1950ல்  சங்கீத சாகித்ய கலா சிகாமணி
என்னும் பட்டத்தை இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அளித்தது.

 1971ல் மியூசிக் அக்காடமி சங்கீத கலாநிதி பட்டம் அளித்தது.






Thursday, October 6, 2011

விவாஹத்தின் போது என்ன ? என்ன ? ராகங்கள் வாசிப்படுகிறது




1.) மாப்பிள்ளை அழைப்பின்  பொழுது
     1.கல்யாணி; 2.சங்கராபரணம்


2.) மாப்பிள்ளை வரும்பொழுது
    3.கரகரப்ரியா; 4.காம்போதி;5,தோடி--


3.) நிச்சயதார்தம்
     6.கானடா; 7.அடாணா 8. பியாகடை


4.) கல்யாணத்தன்று காலை
      9. கேதாரம்; 10. பூபாளம்; 11.பிலஹரி


5.) முகூர்த்தத்திற்கு முன்பு
      12. தன்யாசி; 13. நாராயணி


6.) முகூர்த்தம் நடக்கும்பொழுது
      14. நாட்டைக்குறிச்சி


7.) மாங்கல்யம் கட்டும் சமயத்தில்
     15. ஆனந்த பைரவி.

ஸ்டீவ் ஜாப்ஸ்



                                                         (24 -2 - 1955    5 -10 - 2011)


உலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் ( 56 வயது)   சுமார் 7 வருடங்கள் புற்று நோயுடன் போராடி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் புதன் அன்று (நேற்று  இரவு)  அவர் காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்தை கண்டு  தொழில்நுட்ப உலகே அதிர்ந்து  நிற்கிறது. மேலும் ஜாப்ஸின் மரணசெய்தி ஆப்பிள் தொழில்நுட்ப பயனாளிகளையும்  மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.
ஜாப்ஸின் அறிவு, உற்சாகம் மற்றும் தொழிலில் அவர் காட்டிய ஆர்வம் ஆகியவைதான், இந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாக அமைந்தன என்று , ஆப்பிள் நிறுவனம் கூறியது.


ஆப்பிள் நிறுவனம் சிறந்த படைப்பாற்றல் மிகுந்த உலகின் மிக ஆச்சரியமான மனிதனை இழந்துவிட்டதாக அதன் இணையத்தளத்தில் ஸ்டீவ் ஜாப்ஸை கெளரவப்படுத்தியிருக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள்ள்ன.



ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழிலக்ளுக்கு புது அர்த்தம் தந்தவர் என்று தமது அஞ்சலியில் அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது என்றும் ஒபாமா கூறினார்.


ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின்  தலைவர்கள் மற்றும் தொழில்துறை சகாக்களிடமிருந்தும் அஞ்சலிகள் வந்திருக்கின்றன.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவரான, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் செலுத்திய தாக்க்ததைப் போல உலகில் வேறொருவரைக் காண்பது அபூர்வம் என்றார்.


பேஸ் புக் இணைய தளத்தின் நிறுவனரான, மார்க் ஸுக்கர்பெர்க், தனது பேஸ் புக் பக்கத்தில், ஸ்டீவ் ஜாப்ஸை தனது ந்ண்பர் மற்றும் ஆலோசகர் என்று குறிப்பிட்டு, " நாம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் உலகை மாற்ற முடியும்ென்று காட்டியதற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.


ஸ்டீவ் ஜாப்ஸை, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐன்ஸ்டீனோடு ஒப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினார் நியூ யார்க் மேயர் மைக்கேல் புளூம்பர்க்.


 அவரின் வாழ்க்கை குறிப்பு ;



1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார்.

பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார். 

 
இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார். 

 
இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார்.



கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்".
இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26. 

 
பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கி மாபெரும் கண்டுபிடிப்பு புரட்சி நிகழ்த்தியவரும், இவரே. 



பொறியியல் படிப்பில் எவ்வித முறையான பட்டமும் பெறாத ஸ்டீவ் ஜாப்ஸின் 10 கண்டுபிடிப்புகள்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.


  
2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு ஐ‌ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.

 
கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். 



"உங்கள் வாழ்க்கைக்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மற்றவர்களுக்காக வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்"  என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று. 
 
சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!



                                                 வாழ்க  அவர் புகழ்  


                                                                                               உங்கள்
                                                                        ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV 

Tuesday, October 4, 2011

தியாகி சுப்பிரமணிய சிவா




தியாகி சுப்பிரமணிய சிவா      ( 4 /10 /1884  --  23 / 7 /1925 )

சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரன் வைத்தியநாதன் என்று பெயர்.

சுப்பிரமணிய சிவா கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது.

சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோராவர்.

1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லஹுஅக்பர்', என்று முழக்கமிடுவாராம்.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டது.

சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்து போனார் .சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

                                இன்று அவரின் பிறந்தநாள்

                     வாழ்க சுப்பிரமணிய சிவாவின் புகழ்!

                                                                            அன்புடன் உங்கள் ,
                                                                ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Saturday, October 1, 2011

பெஞ்சமின் பிராங்க்ளின் கற்றுக்கொடுத்த பாடம்



நேர நிர்வாகம்


பெஞ்சமின் பிராங்க்ளின் ஒரு புத்தக வெளியீட்டகம் நடத்தி வந்தார். ஒரு நாள் அந்த கடைக்கு வந்த ஒருவர் ஒரு புத்தகத்தை எடுத்து அங்கு பணியிலிருக்கும் பையனிடம் அந்த  புத்தகத்தின் விலையைக் கேட்டார்.

"ஒரு டாலர்" என்றான் அந்த பணியாள்.

வந்தவருக்கு அந்த விலை அதிகமாக தோன்றவே, "நான் அடிக்கடி இங்கு வந்து புத்தகங்கள் வாங்குவேன். எனக்கு விலையைக் குறைத்துத் தர வேண்டும்" என்றார்.

அதற்க்கு அந்த சிப்பந்தி "நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டுமென்பது எங்கள் உரிமையாளர் உத்தரவு" என்றார்.

"அப்படியானால் நான் உங்கள் உரிமையாளரைப் பார்க்க வேண்டும்" என்றார் வந்தவர்.

உரிமையாளர் உள்ளே முக்கியமான் வேலையில் இருப்பதாக சொன்னார் அந்த பணியாளர். வந்தவர் அவரை பார்க்காமல் செல்வதில்லை என்றார். அவர்களுக்குள் வாக்குவாதம் வளர்ந்தது.

இவர்களின் சத்தம் கேட்டு வெளிய வந்த பெஞ்சமின் பிராங்க்ளின், அந்த வாடிக்கையாளரிடம் என்னவென்று கேட்டார். அவரும் அந்தப் புத்தகத்தை காட்டி அதன்  விலையைக் கேட்டார்.

"ஒன்றேகால் டாலர்" என்றார் முதலாளி

கேட்டவர் அதிர்ச்சியடைந்து "பையன் ஒரு டாலர் தான் சொன்னான்" என்றார்

"ஆம் பையன் சொன்னது ஒரு டாலர் தான். நான் சொன்ன விலை ஒன்னேகால் டாலர். இப்போது அந்த விலைக்கும் தர முடியாது. ஒன்றரை டாலர் வேண்டும்" என்றார் பெஞ்சமின் .

அதிர்ந்துவிட்ட வாடிக்கையாளர் "என்ன இது இருக்க இருக்க விலையை ஏற்றிக் கொண்டே போகிறீர்களே" என்றார்.

"ஆம் இன்னும் தாமதித்தால் இன்னும் ஏறும்" என்றார் பெஞ்சமின்.

"ஏன் அப்படி?" என்றார் வந்தவர்

"ஏனென்றால் நீங்கள் என் பொன்னான நேரத்தை விரயம் செய்துகொன்டிருக்கிறீர்களே அதனை யார் ஈடு கட்டுவது?." என்றார் பெஞ்சமின் .

வந்தவர் எதுவும் பேசாமல் ஒன்றரை டாலரைக் கொடுத்துவிட்டு புத்தகத்தை எடுத்துச் சென்றார்.

நம்மில் பலரும் இப்படித்தான். ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்காக பேரம் பேசி  அதனை விட மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்போம். நேரத்தின் மதிப்பை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெஞ்சமின் பிராங்க்ளின் நமக்குப் புரியவைத்து விட்டார்.