Thursday, December 29, 2011

எஸ் பாலசந்தர்




 இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் வி.சாந்தாராம், 1936-ல்சீதா கல்யாணம்” என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். இதில் எஸ்.பாலசந்தரின் குடும்பமே நடித்திருக்கிறார்கள். தசரதராக நடித்தவர் பாலசந்தரின் அப்பா சுந்தரம் அய்யர் அவரது அண்ணன் எஸ்.ராஜம் ராமர் வேஷம். அக்கா ஜெயலட்சுமி சீதையாக நடித்திருக்கிறார், அப்படத்தின் ஒரு காட்சியில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக பாலசந்தர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகத் துவங்கிய அவரது திரைப்பிரவேசம் தமிழ்சினிமாவில் பல்வேறு மாற்றங்களை. சாதனைகளை உருவாக்கியது, பின்னாட்களில் சினிமா உலகை உதறிவிட்டு வீணை வாசிப்பில் உலகப்புகழ் பெற்று வீணை எஸ் பாலசந்தர் என்று அறியப்பட்டார்.

1948 மார்ச் மாதத்தில் வெளிவந்த “இது நிஜமா”  என்ற  திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார் எஸ்.பாலசந்தர் . இதுவே தமிழில் இரட்டை வேடம் இடம் பெற்ற முதல் சமூகப்படம். (கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்)

1950 -60 களில் வெளியான படங்கள் பெரும்பாலும், குடும்பக் கதைகளாகவும், புராணக் கதைகளையும் ஒட்டித்தான் இருந்தன. அதிலும் குறிப்பாக, சிவாஜிகணேசனின் உணர்ச்சிக் காவியங்களும், ஜெமினிகணேசனின் காதல் கதைகளும்,எம்.ஜி.ராமச்சந்திரனின் வரலாற்றுக் கதைகளும், வந்து கொண்டிருந்தன.

ஸ்ரீதர், பீம்சிங், பி,.ஆர்.பந்துலு போன்ற இயக்குனர்கள், குடும்பங்களில் நடக்கும் உறவுச் சிக்கல்களையும், மெலோடிராமா பாணியில், திரைக்கதை அமைத்து படங்களை உருவாக்கினார்கள்.

அந்தச் சமயத்தில், எஸ்.பாலசந்தரின் திரைப்படங்கள், ஒரு புதுவிதமான அலையைத் தோற்றுவித்தன . திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது திரைப்படங்கள், ஆங்கில படங்களில்ன் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தன. அவற்றை, நம்முடைய சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஏற்ப  மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். எஸ்.பாலசந்தரின் படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், மலிவான பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல production value கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.இன்றும் அவரது திரைப்படங்களைப் பார்க்கும் போது அவரது கேமிரா கோணங்களும். கதை சொல்லும் முறையும், பாடல்களும், பின்னணி இசையை கையாளும் விதமும், அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி தமிழ் இயக்குனர்.

அழகான ஆங்கில பேச்சும்  அவரது ஸ்டைலான நடிப்பும் நமக்கு மேலும் வியப்பளிக்கின்றன . இப்படி  சினிமாவில் நடிப்பு, இசை, இயக்கம் என்று பன்முகத்தன்மையில்   சிறப்பித்த காரணத்தால் அவருக்கான தனியிடம் கிடைத்தது,

எஸ்.பாலசந்தர்  சொந்தப்பட நிறுவனமான எஸ்.பி.கிரியேஷன்ஸ்சைத் தொடங்கி, “அவனா இவன்”, “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய திகில் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

அந்த நாள், பொம்மை, நடு இரவில் ஆகிய மூன்று படங்களையும் தமிழ் சினிமாவின்  முன்னோடி முயற்சிகள் என்றே சொல்லாம்.


இதில் அந்த நாள் அகிரா குரசோவாவின் ரோஷமான் படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டிருக்கிறது.ரோஷமோன் போல ஒரு நிகழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைச் சொல்ல முயன்ற இயக்குனர் அதற்குப் பின்புலமாக யுத்த காலத்தை எடுத்துக் கொண்டது திரைக்கதை யுக்தி பிரமிக்கவைகிறது.


இந்தியாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் (சிவாஜி) ஆத்திரத்தில், அந்நிய நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள் என்ற கதையை ரோஷமானின் கதைக்கு இணையாகத் தேர்வு செய்து படமாக்கியிருந்தார் , குறிப்பாக இந்த படத்தில் வரும் சிவாஜியின் எதிர்மறை கதாபாத்திரமான ரேடியோ என்ஜினியர் யாரும் நடிக்காத கதாபாத்திரம், அதன் இருண்ட மனநிலையும் கோபமும் மனக்கொதிப்பும் நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கும் ,படத்தில் பாடல்களே இல்லை.


அது போன்ற கதாபாத்திரம் எதையும் பின்னாளில் சிவாஜி நடிக்கவேயில்லை , ரோஷமானின் படத்தொகுப்பை போலவே இதிலும் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இப்படத்தை இயக்கும் போது எஸ். பாலசந்தருக்கு வயது 27, சம்பிரதாயமாக நம்பிக் கொண்டிருந்த திரைப்படத்தின் விதிகளை தூர எறிந்துவிட்டு மாறுபட்ட அழகியலோடு கதை முன்பின்னாக சென்று அவிழும் முறையில் திரைக்கதை  உருவாக்கியிருந்தார்.

பொம்மை மற்றும் நடுஇரவில் படத்தில் அவரது இயக்கமும் பரிசோதனை முயற்சிகளும் கூடுதல் வியப்பளிக்கின்றன,


ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் பொம்மை படம், 1964-ல் வெளி வந்த இப்படத்தில் ஒரு பொம்மைக்குள் வெடிகுண்டை வைத்து ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள், அந்த பொம்மை கைமாறிப்போய்விடுகிறது, அதைத் தேடியலைகிறார்கள் என்ற எளிய கதையை தனது திரைக்கதையின் வழியே மிக சுவாரஸ்யமாக்கியிருப்பார் பாலசந்தர்.


படத்தின் துவக்கத்தில் ஒரு மவுத் ஆர்கன் வாசிக்கும் காட்சி அறிமுகமாகிறது, அந்த இசை சிலிர்ப்பூட்டக்கூடியது,  படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக பாலசந்தரே நடித்திருக்கிறார், அவரது நடிப்பு அலாதியான ஒன்று, முகபாவங்களை வெளிப்படுத்தும் முறையும். நடையில் அவர் காட்டும் நளினமும். பேசும் போது ஸ்டைலான ஆங்கிலம் கலந்து பேசும் முறையும், உடையமைப்பும் யார் சாயலும் அற்ற தனிவகை நடிப்பாகவே இருக்கிறது, பொம்மை படத்தின் ஆரம்பக் காட்சியில் அவர் நடந்து வந்து  தனது சிங்கப்பூர் பயணத்தை பற்றி பேசும்போதே படம் வித்யாசமான ஒன்று என்று  நமக்கு    புரிந்துவிடுகிறது.

பொம்மை படத்தில் ஐம்பது வருஷத்தின் முந்தைய சென்னை நகரின் காட்சிகளை காண்பது வேடிக்கையாக இருக்கிறது, கூட்டமேயில்லாத விமானநிலையத்தில் பயணிகளை மலர்கொத்து தந்து வழியனுப்ப வந்தவர்கள், அன்றைய டாக்சிகள். பரபரப்பில்லாத சாலைகள்,  அக்கால பேஷன் உடைகள், உணவகங்கள். சாலையோர மனிதர்கள், சென்னையின் கடந்தகாலத்தை காண்பது பிரமிப்பாக  இருக்கிறது.

படத்தின் பின்ணணி இசை சிறப்பானது, எந்த இடத்தில் இசையே இல்லாமல் நிசப்தமாக விட வேண்டும் என்பதை அவர் சரியாக உணர்ந்திருக்கிறார், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் காணப்படுவது போல  செயற்கையான பின்னணி இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசைக்கோர்ப்பு அவருடையது.

ஒருபோதும் பாலசந்தர் டூயட் பாடல் காட்சிகளை  பயன்படுத்தவேயில்லை, பி.சுசீலா பாடி விஜயலட்சுமி நடனமாடியுள்ள எங்கோ பிறந்தவராம் பாடலையும், தத்தி தத்தி நடந்து செல்லும் தங்கபாப்பா பாடலையும் எஸ்.பாலசந்தர்  படமாக்கிய விதம் மாறுபட்டதாகவே இருக்கிறது.

பொம்மை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த  நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஜேசுதாசின் பாடல் உள்ளது,  இதுத்தான் அவருக்கு முதல் தமிழ்  பாடல். சாலையோரப் பிச்சைக்காரன் பாடும் பாடலது. பாடலின் வரிகள் கதையோடு இணைந்து செல்லும் அதே வேளையில் ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும், அப்பாடலை ஜேசுதாஸ் பாடும் முறை கேட்பவரை மெய்மறக்க செய்துவிடும்.




இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஓபன்  சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது, பார்வையாளர்களுக்கு பொம்மையில் வெடிகுண்டு இருப்பது தெரிந்துவிட்டது, ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது, எந்த நிமிஷம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற மர்மத்தை விறுவிறுப்பாக கையாளும் விதத்தில் திரைக்கதையமைப்பின் உச்சநிலையை உருவாக்கிக் காட்டுகிறார் பொம்மை படத்தின் இறுதி காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பாலசந்தர் தனது படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறார், இன்று வரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சியது.




தமிழ் ஊடகக்கலை பயிற்சியில் மௌனப்படங்களை பற்றி தனிப்பாடம்  இருக்கிறது. சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், கிரிபித், என்று நூறு ஆண்டுகளுக்கு முந்திய அமெரிக்க சினிமாவின் சலனப்படங்களை மட்டுமே  நம் தமிழ் ஊடகக்கலை மாணவர்களுக்கு சொல்லிதறபடுகிறது.

ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்திய தமிழ்சினிமாவை பற்றி அதிகம் சொல்லித்தருவதில்லை .நமது முன்னோடிகளை நாம் புறக்கணிக்கிறோம், அவர்களை உதறித் தள்ளிவிட்டு எங்கிருந்தோ நமது அடையாளங்களை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம் என்பது தான் இன்றுள்ள நமது பிரச்சனை என்பது வருத்ததிற்குரியது.

தமிழ்சினிமாவின் தனித்துவமான இயக்குனர்கள் குறித்து இன்றுவரை விரிவான ஆய்வுகளோ. முறையான கட்டுரைகளோ வெளியாகவேயில்லை, அப்படி வந்தால்  அந்தப் பட்டியலில் தனித்து ஒரு நூல் எழுதுமளவு முக்கியமானவர், தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளில் ஒருவர் என்றும் இயக்குனர் எஸ் பாலசந்தர் அவர்களை சொல்லலாம் .

                                                என்றும் அன்புடன் ,
                           ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV
 

1 comment:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete