அன்னாஹசாரே!
இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியைப் பிடித்திருப்பவர். ஒரு காந்தியவாதியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது இவரது நடவடிக்கைக்குக் கொடுக்கப்படும் விளம்பரம்.
இவரது போராட்டம் குறித்து பல்வேறு கருத்து நிலைகள் எழுந்துள்ளன.
அவைகளில் சில :-
ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில் ,ஒரு துருப்புச் சீட்டாக அவரைப் பயன்படுத்தி அரசின் அராஜகத் தன்மைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்கின்ற வாதப்பிரதிவாதங்களும் சமஅளவில் எழுந்தவண்ணமிருக்கின்றன.
அவர் முக்கியமல்ல அவர் முன்னெடுத்திருக்கும் போராட்டம் முக்கியமானது என்பது வரையில் எழும் கருத்துக்கள் எதுவும் நிராகரிக்கப்படக் கூடியதல்ல.
காந்திக் குல்லாயுடன் போராட வந்திருக்கும் அன்னாஹசாரே ஒரு நேர்மையான காந்தியவாதி அல்ல. இவர் ஒரு போலிக்காந்தியவாதி என்பது முதல், அவருக்குப் பின்னால் அணிதிரளும் மக்கள் ஏமாற்றப்பட்டு விடுவார்கள் என்ற எச்சசரிக்கைக் குரல்களும் உண்டு .
அன்னா ஹசாரே யார் ?
கிஷன் பாபுராவ் ஹசாரே இதுத்தான் அவரது முழு பெயர் . அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன.
இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, நம் நாட்டில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த அன்னா ஹசாரே திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக மட்டும் ஏன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறிய கிராமத்தில் தன்னிறைவு ஏற்பட்டு உள்ளதா ? அண்ணா ஹசாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பது நிஜமா?. ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை சில ஊடகங்கள் ஏன் வெளியிடாமல் இருக்கின்றன?
அன்னா ஹசாரே எப்படிபட்டவர் ?
ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹசாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபா ஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும் இருந்திருக்கிறார்கள். மேலும் வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்!
யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம் அண்ணா ஹசாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள் திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். என்று; ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.
இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இவ்வளவு ஏன் முட்டாள் தனமான ஒன்றும் உண்டு , ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார். கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.
தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர் வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.
காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார் ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும் ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்து காரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
அண்ணா ஹசாரேயின் ஒரு தம்பிடி கூட செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான் தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணா ஹசாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவரா அஹிம்சாவாதி?
ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரது பிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதி வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு.
‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் போனது ?
இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டார் ?
பின்னாளில் நரேந்திர மோடியைப் பாராட்டி கடிதம் எழுதினார். "நரேந்திர மோடியைப் பாராட்டினால் உங்கள் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும் ஆடிபோய்விட்டார் .
மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்ப நல்லவன்," என்று எல்லாரையும் நம்ப வைக்க முயன்றவர் அல்லவா இந்த காந்தீயவாதி?
"ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கில் போட வேண்டும்," இது அண்ணா ஹசாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து.
அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதே கூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா?
அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா?
அன்னா ஹசாரே நான் காந்தீயவாதிதான். ஆனால், அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு ஒரு விளக்கம் வேறு!
அன்னா ஹசாரேதான் ஊழல் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரோ காந்தியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் ,சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் என்று அவரே இப்போது மதில் மேல் பூனையாகி இருக்கிறாரே....!
இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது? மந்திரம்தான்.
ஊழல் பற்றி :-
மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதிய வரலாறு படைத்தது என்பது நமக்கு தெரிந்த விஷயம்.
ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது.
ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதிலோ, அவ்வாறான போராட்டங்களை நடத்துவதிலோ தவறில்லை.
ஆனால் அதனை முன்னெடுக்கும் தலைவராக அறியப்படுபவர் நியாயமானவராக இருக்க வேண்டும். அவரது செயல் சரியானதாக இருக்க வேண்டும்.
இல்லையெனில், அவர் பின்னால் திரளும் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுவார்கள். போராட்டங்களுக்கான முறையான தீர்வு எட்டப்படாமல், சந்தர்பவாதச் சமரசங்களுக்குள் முடக்கப்படுவார்கள், இதனால் மக்கள் போராட்டத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விடும் என்பது கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் .
ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதமாக ஒரு சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் லோக்பால் மசோதாதான் சரியானது என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.
சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் ?
மசோதா வரைவு குழுவில் யார் யார் ?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற காங்கிரஸ் ஆட்சியாளகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில் ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள்
இன்னொரு புறம். "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த் கமிட்டியால் குற்றம் சாட்டப்பட்ட அண்ணா ஹசாரே.
அண்ணா ஹசாரேவும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், ஹசாரேவுக்கு வந்ததே கோபம் உடனே .
"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று தன் சுயலாபதிற்க்காக போராட்டம் அறிவித்து இருக்கிறார் .
அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா ஹசாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், ஹசாரேவின் வாய் மௌனித்து போனது ஏன் ?.
பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த அண்ணா ஹசாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?
இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப் போகிறவர்கள் ரொம்ப நல்லவங்க ?
பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணா ஹசாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது
"சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமான தீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணா தெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை 2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப் பெற வைத்திருக்கிறார் )
சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில் விடுதலையானவர் அல்லவா காந்தீயவாதி அண்ணா ஹசாரே?
இவர்களுக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்ன யோக்யதை இருக்கிறது? அதை மதிப்பவர்களாயிருந்தால், இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏளனம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?
அரசு லோக்பால் - ஜன் லோக்பால் என்றால் என்ன ?
அன்னா ஹசாரேவிற்க்கு அரசியல் சட்டம், அரசு லோக்பால் பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இவர் சொல்லும் ஜன்லோக்பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?
இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஆனால்,
ஹசாரேவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...?
"ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும்.
ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’
இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இது யாரை ஏமாற்றுகிற வேலை?
Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள் அவை.
அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?
ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத் மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்க முடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.
ஏன்? ஏன்?? ஏன்???
சரி, அரசு லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
ஆனால்,
அவற்றை அண்ணா ஹசாரேயின் ஜன் லோக்பால் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?
மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?
தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர்.
விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.
இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்?
தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவை நடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி, பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்ற அடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம் போட்டு, பேனர் தூக்கியது தவிர என்ன கிழித்திருக்கிறார்கள்?
ஹசாரே முன்னிறுத்தும் வடிவம், அரசு முன்னிறுத்தும் வடிவம் இரண்டில் எது சட்ட வடிவமானாலும் உயர் நீதி மன்றத்தில் ஓர் எளிய ரிட் மனு மூலம் அது பொடிப் பொடியாகும் சாத்தியம் அதிகம். அதிலும் ஹசாரே முன்னிறுத்தும் வடிவம் சொல்லவே வேண்டாம் .
ஹசாரேயின் உண்ணாவிரதம் ஏன் என்ன பயன் ?
அண்ணா ஹசாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்று விரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒரு எதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.
இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்ற பெருமூச்சுடன்!
ஆனால், ஹசாரேவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறு என்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாமா?
ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில், வெறும் 6 தான் ஹசாரேவின் கோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன?
"5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்று நாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது," என்றுதான் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.
"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்," என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள் என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்ப விதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும், முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும் உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான் அண்ணா ஹசாரே குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!
ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று ஹசாரேவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்று சட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும்.
அப்படியே இருந்தாலும், அதுகுறித்து ஹசாரே கவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவே அவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை
ஹசாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!
வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் அவரை ஆதரிப்பதை நிறுத்துவிட்டு யோசிப்பவர்கள் எத்தனை பேர், நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளது என்னை திட்டப்போகிறவர்கள் எத்தனை பேர் என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.
ஏன் என்றால் இதை ஏற்ப்பதும் ,மறுப்பதும் அவரவர் விருப்பம் .என்னை பொறுத்தவரை ஊழலுக்கு ஏதிரான இந்த போராட்டம் தவறில்லை அதை வழிநடத்தும் நபர் சரியில்லை என்பது மட்டுமே , தவறான நபரை ஆதரித்தது நம் மக்கள் என்ற தீராத பழிக்கு ஆளாக வேண்டாம் என்பதே என் ஆதங்கம் .
மணிப்பூரில் பத்து வருடங்களுக்கு மேலாக மேற்கொண்ட மனிதாபிமான கோரிக்கை கொண்ட உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளா சானுவுக்கு ஏன் ஊடகங்களில் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை?
மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து நிற்கும் மருத்துவர் பினாயக் சென் சத்தீஸ்கர் அரசால் சிறையில் அடைக்கப்பட்டாரே, இந்திய நடுத்தர வர்க்கம் அப்போது ஏன் கிளர்ந்து எழவில்லை?
அரசாங்கமும் , அரசியல் கட்சிகளை சார்ந்து இருக்கும் பரபரப்பு ஊடகங்களும் அன்னா ஹசாரேயை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவுக்கே வர நேர்கிறது .இது ஒரு நூறு சதவிகிதம் அரசியல் நாடகம்.! என்பதை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.
ஊழலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. கொடுக்கல்-வாங்கல்! முதலில் நம் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி!
அன்புடன் உங்கள் ,
ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV