Thursday, July 28, 2011

ஸ்ரீரங்கம் மஹாபுன்யசேத்ரம்.




ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு :

ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.


கோவிலின் அமைப்பு,
 

ஸ்ரீரங்கம்; திவ்ய தேசங்கள் அனைத்திலும் தலையாயது.
ஸ்வயம்வ்யக்த ஸ்தலங்கள் எட்டிலும் முதன்மையானது ஸ்வயம்வ்யக்த மூர்த்திகள் மனிதரால் செய்யப்படாதவை; தாமே தோன்றியவை.


ஆலயத்தி்ன் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொ...ண்டுள்ளார். திருவுண்ணாழி (தர்ம வர்மன்) திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, திருமங்கை ஆழ்வார் அமைத்தருளிய நான்காவதான ஆலிநாடன் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திரிவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று என்னும் ஸப்த ப்ராகாரங்கள்; அவற்றை உள்ளடக்கியதாக (156 ஏக்கர் பரப்பு) அடைய வளைந்தான் திருச்சுற்று. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

236 அடி உயரத்தில் 13 கலசங்கள், 13 நிலைகளோடு நெடிதுயர்ந்த ராஜகோபுரம். நாயக்க மன்னர்கள் ஆரம்பித்த இத்திருப்பணி தொடராமல் நின்று விட்டது. பின்னர் அஹோபில மடம் ஜீயரால் கட்டி முடிக்கப் பட்டது.

21 கோபுரங்கள்; நம்பெருமாள் ஸந்நிதி், தாயார் ஸந்நிதி, ஸுதர்சநர் ஸந்நிதி ஆகியவை அளவில் பெரியவை; இவை தவிர ஐம்பத்தைந்து சிறிய ஸந்நிதிகள்;

கருவறைக்கு முன் உள்ளது ரங்க மண்டபம். இதை காயத்ரி மண்டபம் என்பர். காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்கள் போல் இதில் 24 தூண்கள் உள்ளன.

தென்னக வைணவ மரபின் புகழ்பெற்ற இரு ஆசார்ய புருஷர்கள் ஸ்வாமி தேசிகனும், ஸ்வாமி மணவாள மாமுனிகளும் ஆவர்; இவ்விருவருக்கும் தாயார் ஸந்நிதியருகே தனி ஸந்நிதிகள் உள்ளன.

ஆலயத்தைச் சீர் குலைத்த அந்நியனைத் தந்திரமாகக் கோபுரத்தின் மேலேறச் செய்து அங்கிருந்து கீழேதள்ளிக் கொன்றாள் வெள்ளையம்மாள் என்ற கணிகை; பின்னர் தானும் கீழே விழுந்து உயிர் துறந்தாள். அவளது புகழை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது வெள்ளைக் கோபுரம்.

கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

‘தென்னாடும், வட நாடும் தொழநின்ற திருவரங்கம்’ எனவும், ‘பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே’ எனவும் அடியார்கள் இதைப் புகழ்ந்துள்ளனர்.

இங்குதான் உடையவர் கத்யத்தை அருளினார். ஈடு விளைந்த இடம்; பெரிய நம்பிகள், பட்டர், சீராமப்பிள்ளை, லோகாசார்யர் போன்ற மஹநீயர்களின் அவதார ஸ்தலம் இது.

அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ’ என்பதற்கிணங்கக் கடைசிவரை அரங்கனின் கடைத்தலை பற்றி வாழ்ந்த அடியார்கள் எண்ணற்றவர். ஸ்ரீ பராசர பட்டர் ‘ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்’ என்னும் துதி நூலில் அரங்க நகரப்பனின் அருமை பெருமைகளை அழகுற வர்ணித்துள்ளார்.

இவ்வாலயத்திலிருந்து 644 கல்வெட்டுக்களை மைய அரசு படி எடுத்துள்ளது; இவை அனைத்தும் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 24ல் பதிவாகியுள்ளன. 9ம் நூற்றாண்டி லிருந்து 18ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் வாழ்ந்த பல மரபுகளையும் சார்ந்த மன்னர்களின் கல்வெட்டுக்களும், காகதிய, கஜபதி, தெலுங்குச் சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும் இவ்வாலயத்தில் உள்ளன.

ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும், ஸ்ரீ ரங்கத்திலும் உண்டுறங்கி வாழ்வதே கிடைத்தற்கரிய ஸாதனை என்பார் பரனூர்ப் பெரியவர். காளியன் ப்ருந்தாவன வாஸத்தாலேயே கண்ணபிரானின் திருவடி ஸ்பர்சம் பெற்றான். ஸாது க்ருஷ்ண ப்ரேம் இவ்வாலயத்தில் இறையனுபவம் பெற்றார்; இவர் அயல் நாட்டவர்.


பூஜை முறைகள், 
 


ஸ்ரீரங்கநாதபெருமாளுக்குச் சாத்தப்படும் மாலைகளுக்கான மலர்கள் தொண்டரடிப் பொடியாழ்வார் திரு நந்தவனத்திலிருந்து பெறப்படுகிறது. மலர் கொய்வோர் தும்மல், மூச்சுக் காற்று, எச்சில் படாமல் துணியால் மறைத்துக் கொண்டு மலர் பறிப்பர்.


பெருமாளுக்கான நிவேதனம்... மட்பாண்டங்களில் தயாராகின்றன. நம்பெருமாள் நீராட்டம் கண்டருளுவது இளஞ்சூடு கொண்ட வெந்நீரில்.

நம்பெருமாள் விசேட தினங்களில் அணி்யும் பாண்டியன் கொண்டையும், கிளி மாலையும் கலை நயம் மிக்கவை.

மூலவர் - ஸ்ரீரங்கநாதர்,

உத்ஸவர் - அழகிய மணவாளன்

தாயார் - பெரியபிராட்டியார்

தீர்த்தம் - சந்த்ர புஷ்கரிணி ,காவேரி

பெருமாள் – பெரிய பெருமாள்

தாயார் – பெரிய பிராட்டியார்

வாஹனம் – பெரிய கருடன்

அரங்கனின் ஆசார்யர் – பெரிய ஜீயர் (மாமுனிகள்)

தளிகை – பெரிய அவசரம்

 

விழாக்காலங்கள்,
 
இவ்வாலயத்தில் ஆண்டின் இருநூறு நாள்களுக்கும் மேலாகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் .

தை, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களில் மூன்று ப்ரம்மோத்ஸவங்கள் .

சித்திரையில் வஸந்தோத்ஸவம் - விருப்பன் திருநாள்,

வைகாசியில் விசாக உத்ஸவம், தொடர்ந்து ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் வஸந்த உத்ஸவம்,

ஆனியில் கேட்டை நக்ஷத்ரத்தில் ஜ்யேஷ்டாபிஷேகம்,

ஆடிப் பெருக்கு - அம்மா மண்டபத்திற்குத் தங்கப்பல்லக்கில் உலா,

ஆவணியில் ஆகமங்கள் வலியுறுத்தும் பவித்ரோத்ஸவம்,

புரட்டாசியில் நவராத்திரி உத்ஸவம்,

ஐப்பசியில் ஊஞ்சல் உத்ஸவம்,

கார்த்திகை - மார்கழி மாதங்களில் திருவாய்மொழித் திருநாள், வைகுண்ட ஏகாதசித் திருவிழா,

தை மாதத்தில் பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தேரோட்டம், தெப்பத் திருவிழா; நம்பெருமாள் திருமுன்னிலையில் புதிதாக அறுவடையான நெல்லைக் கொட்டி அளப்பார்கள்

மாசி மாதம் நடைபெறும் கருட சேவை மிகவும் புகழ் பெற்றது

பங்குனியில் ஆதி ப்ரம்மோத்ஸவம், பங்குனி உத்திர தினத்தில் உடையவர் செய்யும் சரணாகதி; ஏகாஸநத்தில் தாயாரும், நம்பெருமாளும் வீற்றிருப்பர்.

அயலிடங்களில் வாழ்வோருக்கும், மதக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற இயலாதவருக்கும் அரங்கமே கதி; திருவரங்கம் திகழும் திசை நோக்கித் தொழுவதே ஸர்வபாப ப்ராயஸ்சித்தம்; இது அற நூல்களின் ஸாரத்தை ஓதாமல் உணர்ந்த பரனூர்ப் பெரியவர் முடிவாகக் காட்டும் வழி.

அறிவிலா மனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில்
பொறியில் வாழ்நரகமெல்லாம் புல்லெழுந் தொழியுமன்றே !

உறுசகட முடையவொரு காலுற்றுணர்ந்தன
உடன் மருத மொடியவொரு போதிற்றவழ்ந்தன
உறிதடவுமளவிலுரலோடுற்று நின்றன
உறுநெறியோர் தருமன் விடுதூதுக்குகுகந்தன
மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கைவருட மலர் போதிற் சிவந்தன
மறுபிறவி யறுமுனிவர் மாலுக்கிசைந்தன
மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன
அறமுடைய விசயனமர் தேரில் திகழ்ந்தன
அடலுரக படமடிய வாடிக்கடிந்தன
அறுசமய மறிவரியதானத்தமர்ந்தன
அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கமைந்தன
வெறியுடைய துளவ மலர் வீறுக்கணிந்தன
விழுகறியோர் குமரனென மேவிச் சிறந்தன
விறலசுரர் படையடைய வீயத்துரந்தன
விடலரிய பெரிய பெருமாள் மென்பதங்களே !

                                       ஸ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே !

                                                   அன்புடன் உங்கள் ,
                    "ஸ்ரீவைஷ்ணவன்" ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

1 comment:

  1. அருமையான பதிவு.
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete